தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2 தேசிய விருதுகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2 தேசிய விருதுகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2020 5:43 PM GMT (Updated: 5 Oct 2020 5:43 PM GMT)

ஊரக பகுதிகளில் சுகாதார வளாகங்களை சிறப்பாக பராமரித்தல், பொதுமக்கள் பயன்படுத்தியதற்காக தேசிய அளவில் 2 விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கிடைத்து உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. கழிப்பறை கட்ட வசதி இல்லாதவர்கள் பயன்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய அரசால் ஜல் சக்தி அமைச்சகத்தில் இருந்து தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் உள்ள சமுதாய சுகாதார வளாகங்களை பராமரித்தல் மற்றும் பொது மக்கள் பயன்படுத்துதல் குறித்து 1.11.2019 முதல் 30.4.2020 வரை சுவச் சுந்தர் சமுதாயிக் செளசாலயா என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டது. இதில் மிக சிறப்பாக செயல்படும் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது.

2 விருது

இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கான போட்டியில் இந்திய அளவில் தூத்துக்குடி மாவட்டம் 2-வது இடத்தையும், ஊராட்சி ஒன்றியங்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் இந்திய அளவில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் 3-வது இடத்தையும் பெற்றது.

இதற்கான விருதுகள் காந்திஜெயந்தி அன்று நடந்த விழாவில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தால் காணொலி காட்சி மூலம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story