மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது
x
தினத்தந்தி 5 Oct 2020 9:15 PM GMT (Updated: 5 Oct 2020 9:15 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிரடியாக குறைந்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நேற்று மாநிலத்தில் 10 ஆயிரத்து 244 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநிலத்தில் இந்தளவிற்கு பாதிப்பு குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பலி எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து உள்ளது. மாநிலத்தில் மேலும் 263 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில்...

இதேபோல மாநிலத்தில் இதுவரை 14 லட்சத்து 53 ஆயிரத்து 653 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 லட்சத்து 62 ஆயிரத்து 585 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 12 ஆயிரத்து 982 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 52 ஆயிரத்து 277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் மும்பையில் பல நாட்களுக்கு பிறகு நோய் பாதிப்பு 2 ஆயிரத்தை விட குறைந்து உள்ளது. நேற்று நகரில் 1, 836 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல 47 பேர் உயிரிழந்தனர். நகரில் இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரத்து 488 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 155 பேர் பலியாகி உள்ளனர்.

புனே

இதேபோல புனேயிலும் பெரிய அளவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. புனே மாநகராட்சியில் 395 பேரும், பிம்பிரி சிஞ்வாட்டில் 421 பேரும், புனே புறநகரில் 399 பேரும் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story