கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாருக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை


கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாருக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை
x
தினத்தந்தி 5 Oct 2020 9:57 PM GMT (Updated: 5 Oct 2020 9:57 PM GMT)

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 90-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தாக்கி உள்ளது. இதில் ஏராளமானோர் குணமடைந்து விட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில், பள்ளி கல்வித்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர் பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் சுரேஷ்குமார் நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தினார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் டாக்டரின் அறிவுரையின்படி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாழ்த்து

இதுகுறித்து மந்திரி சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கி உள்ளது. இதனால் எனக்கு எந்த பயமும் இல்லை. டாக்டர்களின் அறிவுரையின்படி அடுத்த சில நாட்கள் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சுரேஷ்குமார் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் ஆகியோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story