தமிழகத்தில் 75½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சென்னையில் 3-வது நாளாக பாதிப்பு 1,300-ஐ தாண்டியது


தமிழகத்தில் 75½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சென்னையில் 3-வது நாளாக பாதிப்பு 1,300-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 5 Oct 2020 10:44 PM GMT (Updated: 5 Oct 2020 10:44 PM GMT)

தமிழகத்தில் இதுவரை 75½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று 80 ஆயிரத்து 686 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,256 ஆண்கள், 2,139 பெண்கள் என மொத்தம் 5,395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 103 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 635 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,367 பேரும், கோவையில் 468 பேரும், செங்கல்பட்டில் 343 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 20 பேரும், பெரம்பலூரில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 75 லட்சத்து 55 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 5413 ஆண்களும், 2 லட்சத்து 47 ஆயிரத்து 819 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 31 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 328 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 80 ஆயிரத்து 759 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

62 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 31 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 62 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேரும், கோவையில் 7 பேரும், திருப்பத்தூரில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருப்பூரில் தலா 3 பேரும், வேலூர், தஞ்சாவூர், தென்காசி, ராணிப்பேட்டை, நாமக்ககல், கன்னியாகுமரி, ஈரோடு, திண்டுக்கலில் தலா இருவரும், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, சேலம், தேனி, திருவள்ளூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 846 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

5,572 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 572 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,074 பேரும், கோவையில் 460 பேரும், தஞ்சாவூரில் 399 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 664 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 45 ஆயிரத்து 881 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 968 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 306 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story