புதுச்சேரி விடுதலை நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பு ரத்து காரைக்கால் கலெக்டர் தகவல்


புதுச்சேரி விடுதலை நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பு ரத்து காரைக்கால் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2020 9:57 PM GMT (Updated: 6 Oct 2020 9:57 PM GMT)

நவம்பர் 1-ந் தேதி நடைபெறும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக காரைக்கால் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காரைக்கால்,

நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமை தாங்கினார். துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அர்ஜூன் சர்மா பேசியதாவது:-

கலைநிகழ்ச்சிகள் ரத்து

வழக்கம்போல் இந்த ஆண்டும், காரைக்காலில் விடுதலை நாள் விழா கொண்டாடப்படும். இந்தாண்டு கடற்கரை சாலையில் விழா நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக, காவல்துறை அணிவகுப்பு மட்டும் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பு நடைபெறாது. கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தயார்நிலையில் இருக்கவேண்டும். விழாவிற்கு வரும் தியாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு, குடிநீர் வழங்க, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும். விழாவில், கொடியேற்று விழா முடிந்தபிறகு, அமைச்சரால் தியாகிகள் கவுரவிக்கப்படுவார்கள். விழாவில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story