சென்னை தியாகராயநகரில் கொரோனா வீட்டில் கொள்ளை வழக்கு: கூலிப்படையினர் 8 பேர் கைது


சென்னை தியாகராயநகரில் கொரோனா வீட்டில் கொள்ளை வழக்கு: கூலிப்படையினர் 8 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2020 10:37 PM GMT (Updated: 6 Oct 2020 10:37 PM GMT)

சென்னை தியாகராயநகரில் கொரோனா பாதிக்கப்பட்ட வீட்டில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 250 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கூலிப்படையினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி மொய்தீன் தப்பி ஓடி விட்டார்.

சென்னை,

சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் நூருல் ஹக் (வயது 70). என்ஜினீயரான இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். மனைவியும் இவருடன் வாழ்ந்து வந்தார். கொரோனா பாதிப்பு இருந்ததால் வீட்டில் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்தனர். இவர்களுடன் மொய்தீன் (29) மற்றும் முஸ்தபா என்ற உறவினர்களும் வசித்தனர்.

கடந்த வாரம் இவர்களுடைய வீட்டுக்குள் 8 பேர் கொண்ட கும்பல் கையில் பளபளக்கும் பட்டாக்கத்தியை ஏந்தியபடி புகுந்தனர். அவர்கள் முதலில் டிரைவர் அப்பாசை அடித்து, உதைத்து கட்டிப்போட்டனர். பின்னர் வீட்டுக்குள் சென்று நூருல் ஹக் மற்றும் அவரது மனைவியை தனித்தனி அறைக்குள் தள்ளி கயிற்றால் கட்டினார்கள்.

250 பவுன் நகை கொள்ளை

பீரோ லாக்கரில் வைத்திருந்த 250 பவுன் தங்க நகைகள், ரூ.95 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கைக்கடிகாரம் போன்றவற்றை கொள்ளையடித்தார்கள். பின்னர் வெளியில் வந்து, வீட்டில் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு அதில் தப்பிச்சென்றனர். அவர்களுடன் மொய்தீனும் தப்பிச்சென்றார்.

இது குறித்து பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

8 பேர் கைது

தப்பி ஓடிய மொய்தீன்தான் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. அவர் அழைத்து வந்த கொள்ளையர்கள் 8 பேரும் கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்கள். கொள்ளையடித்த நகைகளில் அவர்களுக்கும் பங்கு தருவதாக சொல்லி மொய்தீன் அழைத்து வந்துள்ளார்.

கொள்ளையடிக்க கூலிப்படை யாக வந்த மகேஷ், ஆலன், அப்பன், விஜய், சுகுமார், லோகேஷ், எல்லப்பன், லோகேஷ்குமார் ஆகிய 8 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மொய்தீன் தப்பி ஓடி விட்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரிடம்தான் உள்ளது. அவரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Next Story