உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் - கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்தது


உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் - கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்தது
x
தினத்தந்தி 7 Oct 2020 2:46 PM GMT (Updated: 7 Oct 2020 2:46 PM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையொட்டி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டித்தும், ராகுல்காந்தி பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று அறவழி போராட்டங்கள் நடந்தன.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வின்சென்ட் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, ஏகம்பவாணன், ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை தலைவர் சேகர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில துணை அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா, வர்த்தக பிரிவு மாவட்டத்தலைவர் முபாரக், கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, மனித உரிமைத்துறை மாவட்ட தலைவர் லலித்ஆண்டனி, நிர்வாகிகள் அப்சல், ராமன், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், உத்தரபிரதேச மாநிலத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்தும், ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் ஓசூரில் நேற்று அறவழி சத்யாக்கிரக போராட்டம் நடைபெற்றது.

ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐ.என்.டி.யூ.சி. மாநில செயல் தலைவருமான கே.ஏ.மனோகரன், அறவழி சத்யாகிரக போராட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில், மாவட்ட பொதுச்செயலாளர் பிரவீன், கீர்த்திவாசன், பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயல் தலைவர் அசேன், சரோஜா, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story