மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை


மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை
x
தினத்தந்தி 7 Oct 2020 10:20 PM GMT (Updated: 7 Oct 2020 10:20 PM GMT)

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் தனது வீட்டிலேயே தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். பலர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். சிலர் ஆஸ்பத்திரிகளிலும், சிலர் தங்களது வீடுகளிலேயே தனிமையில் இருந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் கொரோனாவுக்கு பெலகாவி தொகுதி பா.ஜனதா எம்.பியும், மத்திய ரெயில்வே இணை மந்திரியுமான சுரேஷ் அங்கடி, பா.ஜனதா மேல்-சபை எம்.பி. அசோக் கஸ்தி, பசவ கல்யாண் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயண் ராவ் உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர். இதுவரை கர்நாடகத்தில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு

இந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநிலம் தார்வார் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரிசபையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரியாகவும் பணியாற்றி வரும் பிரகலாத் ஜோஷியும் இணைந்துள்ளார். அவருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு:-

நான் என்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தேன். தற்போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. எனக்கு அறிகுறியும், எந்தவித தொடர்பும் இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. டாக்டர்களின் அறிவுரையின்படி நான் எனது வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

இவ்வாறு அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில்...

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். அப்போது அவர் எதிர்க்கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு திறம்பட பதில் அளித்து பிரதமர் மோடியின் பாராட்டை பெற்றார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Next Story