சென்னையில் தொடர்ந்து தொற்று அதிகரிப்பு தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது


சென்னையில் தொடர்ந்து தொற்று அதிகரிப்பு தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 7 Oct 2020 10:56 PM GMT (Updated: 7 Oct 2020 10:56 PM GMT)

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 91 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,338 ஆண்கள், 2,109 பெண்கள் என மொத்தம் 5,447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 9 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 94 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 654 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,369 பேரும், கோவையில் 473 பேரும், செங்கல்பட்டில் 324 பேரும், சேலத்தில் 322 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 77 லட்சத்து 25 ஆயிரத்து 962 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 967 ஆண்களும், 2 லட்சத்து 51 ஆயிரத்து 857 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 31 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 24 ஆயிரத்து 449 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 82 ஆயிரத்து 14 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

67 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 35 பேரும், தனியார் மருத்துவமனையில் 32 பேரும் என 67 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 18 பேரும், சேலத்தில் 6 பேரும், கோவையில் 5 பேரும், நாமக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூரில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 23 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 9,984 பேர் உயிரிழந்துள்ளனர்.

5,524 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 524 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,096 பேரும், சேலத்தில் 515 பேரும், கோவையில் 369 பேரும், திருப்பூரில் 318 பேரும், செங்கல்பட்டில் 315 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 736 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 45 ஆயிரத்து 135 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 975 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 311 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரு தனியார் கொரோனா பரிசோதனை மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 66 அரசு மருத்துவமனை மையங்கள், 124 தனியார் மையங்கள் என மொத்தம் 190 மையங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story