மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 358 பேர் பலி


மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 358 பேர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2020 9:24 PM GMT (Updated: 8 Oct 2020 9:24 PM GMT)

மராட்டியத்தில் மேலும் 358 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 13 ஆயிரத்து 395 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 93 ஆயிரத்து 884 ஆகி உள்ளது. இதில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 441 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 15 ஆயிரத்து 575 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

358 பேர் பலி

மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் 81.13 ஆக உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள போதும் பலி எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நேற்று மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு புதிதாக 358 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 39 ஆயிரத்து 430 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 22 லட்சத்து 84 ஆயிரத்து 204 பேர் வீடுகளிலும், 25 ஆயிரத்து 321 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story