தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது


தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 8 Oct 2020 11:12 PM GMT (Updated: 8 Oct 2020 11:12 PM GMT)

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று 85 ஆயிரத்து 435 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 113 ஆண்கள், 1,975 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,295 பேரும், கோவையில் 448 பேரும், செங்கல்பட்டில் 363 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 9 பேரும், தென்காசியில் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 78 லட்சத்து 11 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

68 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 68 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 16 பேரும், வேலூரில் 7 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், செங்கல்பட்டு, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, திருவாரூரில் தலா 3 பேரும், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், திருப்பூரில் தலா இருவரும், அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், தேனி, விருதுநகரில் தலா ஒருவரும் என 23 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 52 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

5,718 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 718 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,144 பேரும், கோவையில் 628 பேரும், சேலத்தில் 467 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 44 ஆயிரத்து 437 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story