ஆர்.டி.ஜி.எஸ். மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ஆர்.டி.ஜி.எஸ். மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 9:18 PM GMT (Updated: 9 Oct 2020 9:18 PM GMT)

வட்டி விகிதம் மாற்றம் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. டிசம்பர் மாதத்தில் இருந்து ஆர்.டி.ஜி.எஸ். சேவையை பயன்படுத்தி 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மும்பை,

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில், ரெபோ ரேட் (வட்டி விகிதம்) 4 சதவீதமாக தொடர உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்தனர்.

ரெபோ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி ஆகும். ரெபோ விகிதம் குறையும்போது, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்கும் கடனுக்கான வட்டியும் குறையும்.

ஆனால், தற்போது ரெபோ விகிதம் அதே விகிதத்தில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதால், வங்கி கடன்களின் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது.

மேலும், ரிவர்ஸ் ரெபோ விகிதத்தை 3.5 சதவீதமாக தொடருவது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இரண்டாவது அலை

பின்னர், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக, பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் முடங்கின. தற்போது, தொழிற்சாலைகள், நகரங்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றன.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால், வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இரண்டாவது அலை உருவாகும் அபாயத்தை தவிர்த்து பார்த்தால், பொருளாதாரம் மீளத் தொடங்கும்.

9.5 சதவீதம் சரியும்

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் குறைந்தது. நான்காவது காலாண்டில்தான் (ஜனவரி முதல் மார்ச் வரை) இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.

மொத்தத்தில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று கணித்துள்ளோம்.

பணவீக்க விகிதம் கடந்த மாதம் உயர்ந்து காணப்பட்டது. பொருட்களின் வினியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்களே இதற்கு காரணம். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில், பணவீக்க விகிதம் 4.5 சதவீதம் முதல் 5.4 சதவீதம் ஆக குறையும்.

சம்பா சாகுபடி அதிகரித்து இருப்பதாலும், பொருட்கள் வினியோகம் சீரடைந்ததாலும் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 4.3 சதவீதமாக குறையும்.

ஆர்.டி.ஜி.எஸ்.

தேசிய மின்னணு பண பரிமாற்ற முறையில் (என்.இ.எப்.டி.) கடந்த டிசம்பர் மாதம் முதல், 24 மணி நேரமும் பணம் அனுப்பும் வசதியை அனுமதித்தோம். அதுபோல், வருகிற டிசம்பர் மாதம் முதல், மற்றொரு மின்னணு பண பரிமாற்ற முறையான ஆர்.டி.ஜி.எஸ். சேவையில் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்.

இதன்மூலம், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்கள், விரைவான, தடையற்ற முறையில் பணம் அனுப்ப முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story