முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் கொரோனா தடுப்பூசி கிடைக்க மேலும் தாமதம் ஆகலாம் மந்திரி தகவல்


முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் கொரோனா தடுப்பூசி கிடைக்க மேலும் தாமதம் ஆகலாம் மந்திரி தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2020 9:48 PM GMT (Updated: 9 Oct 2020 9:48 PM GMT)

கொரோனா தடுப்பூசி கிடைக்க மேலும் தாமதம் ஆகலாம் என்றும், எனவே அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கொரோனா நெருக்கடியில் உள்ள நாம் உடல் நல ஆரோக்கியத்துடன், மனநல ஆரோக்கியத்தை காக்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனநலம் குறித்து ஆலோசனை தேவைப்படுகிறவர்கள், அரசு நியமித்துள்ள பணியாளர்களிடம் இருந்து பெற முடியும். இதற்காக 104 என்ற எண்ணில் உதவி மையம் செயல்படுகிறது. உலக அளவில் மனநலம் பாதித்தவர்களில் இந்தியாவில் 15 சதவீதம் பேர் உள்ளனர். இது இந்த ஆண்டு இறுதிக்குள் 20 சதவீதத்தை எட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கர்நாடகத்தில் மனநல சுகாதார ஆணையம் உள்ளது. மாநிலத்தில் இதுவரை 7.13 லட்சம் பேர் மனநல ஆரோக்கியம் குறித்த ஆலோசனை பெற்றுள்ளனர். இந்த ஆலோசனையை தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நெருக்கடி காரணமாக பலர் வேலை இழந்து பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்களும் மன அழுத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

கொரோனா குறித்த பயத்தை மக்கள் கைவிட வேண்டும். கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை பார்ப்பதை விட்டுவிட்டு, அதில் இருந்து மீண்டவர்கள் குறித்த விவரங்களை பாருங்கள். நேர்மறையான மனநிலையை ஏற்படுத்தி கொள்ளுங்கள். தினமும் யோகா, தியானம் செய்யுங்கள். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். கொரோனா பாதித்தவர்களுக்கு தைரியும் கூறுங்கள். தொடக்கத்தில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை நன்றாக பின்பற்றினர். ஆனால் தற்போது அதில் அலட்சியம் காட்டுகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி கிடைக்க மேலும் தாமதம் ஆகலாம். அதுவரை நாம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சானிடைசர் பயன்படுத்தி தூய்மைபடுத்துவது போன்றவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் இன்னும் மத்திய பகுதியில் தான் இருக்கிறோம். மனநல சுகாதாரம், உடல் ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் நல்ல முறையில் வைத்துக்கொள்வது மிக முக்கியம்.

இவ்வாறு அதில் மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Next Story