வேடிக்கை காட்சியான கொரோனா பரிசோதனை


வேடிக்கை காட்சியான கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 Oct 2020 10:22 PM GMT (Updated: 9 Oct 2020 10:22 PM GMT)

கொரோனா பரிசோதனை என்பது சிறுவர்கள் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டது.

புதுச்சேரி,

உலகமே தற்போது கொரோனா பரவலை பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கட்டுப்பாட்டு நடைமுறைகளை அனைத்து நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன.

புதுவையிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் 300 முதல் 500 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பரிசோதனை செய்ய வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பிலும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 பேருக்காவது சோதனை நடத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே சுகாதார ஊழியர்கள் தெருத்தெருவாக சென்று ஆங்காங்கே முகாம் அமைத்து அப்பகுதியில் வசிப்பவர்களை வீடுவீடாக சென்று அழைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த பரிசோதனைக்கு பொதுமக்கள் தாமாக முன் வருவது இல்லை. அதேநேரத்தில் சிலர் சுகாதார ஊழியர்களிடம் அலட்சியமாக பேசிவிட்டு செல்கின்றனர்.

சிறுவர்கள் வேடிக்கை

இதேபோல் நேற்று முதலியார்பேட்டை காவல்நிலையம் அருகே சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்காக உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது இதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர். அந்த சிறுவர்களில் ஒருவர்கூட முககவசம் அணியவில்லை என்பது தான் துரதிர்ஷ்டமானது.

அங்கிருந்து சென்று விடுமாறு சுகாதார ஊழியர்கள் எச்சரித்த பிறகும் பொருட்படுத்தாமல் அந்த சிறுவர்கள் வேடிக்கை பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர். கடந்த காலங்களில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே பீதியடைந்து வீட்டுக்குள் பொதுமக்கள் முடங்கி கிடந்த காலம் மாறி இப்போது எங்கும் எதிலும் பயம் இல்லாத நிலை உருவாகி இருப்பதையே இது காட்டுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது என்று எச்சரித்து வரும் நிலையில் பொதுமக்களின் இதுபோன்ற அலட்சியம் மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Next Story