அரியலூர் மாவட்டத்தில், முடி திருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டம்


அரியலூர் மாவட்டத்தில், முடி திருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 10:15 PM GMT (Updated: 10 Oct 2020 2:14 AM GMT)

அரியலூர் மாவட்டத்தில் முடிதிருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம்,

திண்டுக்கல் மாவட்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான வாலிபரை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கோரியும், தமிழ்நாடு மருத்துவர் தொழிலாளர் சங்க மற்றும் அரியலூர் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் நேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முடி திருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு அரியலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.

அதன்படி ஜெயங்கொண்டம், சுற்று வட்டார பகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முடி திருத்தும் கடைகள் அடைத்து, பூட்டப்பட்டு இருந்தன. மேலும் இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப கோரி மனு ஒன்றை அச்சங்கத்தின் சார்பில் அளித்தனர். அந்த மனுவில், இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசு உத்தரவிட வேண்டும். தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கான சட்ட பாதுகாப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதேபோல் மீன்சுருட்டி பகுதியில் தமிழ்நாடு மருத்துவர் சமூக மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நேற்று கடை அடைப்பு செய்தனர். அப்போது சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலையான வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, மேலணிக்குழி, ஆண்டிமடம் மற்றும் பாப்பாக்குடி ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Next Story