நெல்லையில் துணிகரம் காண்டிராக்டர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நெல்லையில் துணிகரம் காண்டிராக்டர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Oct 2020 11:18 PM GMT (Updated: 11 Oct 2020 11:18 PM GMT)

நெல்லையில் காண்டிராக்டர் வீட்டில் 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பேட்டை,

நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள எம்.எஸ். யுனிவர்சிட்டி நகரில் வசிப்பவர் செல்வராஜ் (வயது 45). இவர் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவில் செல்வராஜ் தன்னுடைய மனைவி, மகள்களுடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், செல்வராஜின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி நள்ளிரவில் மர்மநபர்கள் நைசாக செல்வராஜின் வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே குதித்தனர்.

25 பவுன் நகை கொள்ளை

பின்னர் வீட்டின் மரக்கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து அங்குள்ள அறையில் இருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,200 ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதிகாலையில் மொட்டை மாடியில் இருந்து செல்வராஜ் குடும்பத்தினருடன் இறங்கி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகை-பணம் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story