மைசூருவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி திடீர் மாயம் கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை


மைசூருவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி திடீர் மாயம் கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Oct 2020 9:50 PM GMT (Updated: 12 Oct 2020 9:50 PM GMT)

மைசூருவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி திடீரென மாயமாகி உள்ளார். அவர் கடத்தப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூருவில் பாபா அணு ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த அபிஷேக் ரெட்டி குல்லா (வயது 26) என்பவர் விஞ்ஞானியாக பணியாற்று வந்தார். மேலும் மைசூரு இலவாலா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அபிஷேக் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி முதல் அபிஷேக் பணிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. கடந்த 5-ந் தேதி அணு ஆராய்ச்சி மைய அதிகாரிகள், அபிஷேக்கின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பணிக்கு வராதது குறித்து கேட்டு உள்ளனர். அப்போது 6-ந் தேதி முதல் மீண்டும் பணிக்கு வருவதாக அதிகாரிகளிடம், அபிஷேக் தெரிவித்து உள்ளார்.

கடத்தலா?

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில், அணு ஆராய்ச்சி மையத்திற்கு அபிஷேக் புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் மணிபர்ஸ், செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் அபிஷேக் பணிக்கும் செல்லவில்லை. அவரது செல்போனுக்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டாலும் அவர் எடுத்து பேசவில்லை. இதனால் அவரது வீடடிற்கு சென்று ஆராய்ச்சி மைய அதிகாரிகள் பார்த்தனர். ஆனால் அபிஷேக் வீட்டிலும் இல்லை. அவர் மாயமாகி விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அணு ஆராய்ச்சி மைய அதிகாரி போஸ் என்பவர், இலவாலா போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிஷேக்கை தேடிவருகின்றனர். மேலும் அவரை யாராவது கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story