கோவாவில் கோவில்களை திறக்க கவர்னர் கடிதம் எழுதாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி


கோவாவில் கோவில்களை திறக்க கவர்னர் கடிதம் எழுதாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 13 Oct 2020 9:23 PM GMT (Updated: 13 Oct 2020 9:23 PM GMT)

மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள கோவாவில் கோவில்களை திறக்க ஏன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை,

வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இதேபோல கோவா மாநிலத்திற்கும் கவர்னராக உள்ள பகத்சிங் கோஷ்யாரி அங்கு கோவில்களை திறக்க ஏன் கடிதம் எழுதவில்லை என கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் கூறியதாவது:-

கோவாவில் மதுக்கடை

மதசார்பின்மை விவகாரம் குறித்து கவர்னர் கூறியிருக்கும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது சரியல்ல என நாங்கள் நினைக்கிறோம். கவர்னர் கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பாரா?.

கொரோனாவை கட்டுப்படுத்த உத்தவ் தாக்கரே அதிக கவனம் செலுத்துகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு கவர்னர் பாராட்ட வேண்டும். கோவாவில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு ஏன் கவர்னர் கடிதம் எழுதவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவாவில் பா.ஜனதா அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story