கனகன் ஏரியில் மீண்டும் மீன்கள் செத்து மிதந்தன கொரோனா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதா?


கனகன் ஏரியில் மீண்டும் மீன்கள் செத்து மிதந்தன கொரோனா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதா?
x
தினத்தந்தி 13 Oct 2020 10:56 PM GMT (Updated: 13 Oct 2020 10:56 PM GMT)

புதுவை கனகன் ஏரியில் மீண்டும் மீன்கள் செத்து மிதக்கின்றன. அங்கு கொரோனா மருத்துவ கழிவுகள் கொட்டப் படுகின்றனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் திலாசுப்பேட்டையில் கனகன் ஏரி உள்ளது. கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்ததன் பேரில் இங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை அமைக்கப்பட்டு படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பின்றி தற்போது படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏரியில் கடந்த ஆண்டு மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்தன. கனகன் ஏரியின் அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் மீன்கள் அங்கு செத்து மிதந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து முறையிட்டதையடுத்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் அப்போது ஆய்வு நடத்தினர். அந்த ஏரியில் இருந்து தண்ணீரையும், செத்து மிதந்த மீன்களையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதன் முடிவில் ஏரி தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால் மீன்கள் செத்து மிதந்ததாக கூறப்பட்டது.

செத்து மிதக்கும் மீன்கள்

இருந்தபோதிலும் கனகன் ஏரியில் மிதந்த ஆகாயத் தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன. மருத்துவ கழிவுகளை ஏரிக்குள் விடாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதற்கிடையே கொரோனா தளர்வுக்குப்பின் பொதுமக்கள் அங்கு தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் தற்போது மீண்டும் கனகன் ஏரியில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. அங்கு நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ஏரிக்குள் பார்த்தபோது மீன்கள் செத்து மிதப்பதும், ஒரு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்ததும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஏரியின் அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கொரோனா மருத்துவ சிகிச்சைக்கான கழிவுகள் கொட்டப்பட்டதால் மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தை பொதுமக்கள் கிளப்பி உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story