2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு


2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 13 Oct 2020 11:31 PM GMT (Updated: 13 Oct 2020 11:31 PM GMT)

2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள என்.ஜி.ஓ. காலனி குப்புசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராம்சுந்தர் (வயது 27) , இவர் கடந்த 3-ந்தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் ராமநாதபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ராம்சுந்தர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் நேரில் சென்று அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு வீட்டில்

திருவள்ளூரை அடுத்த புங்கத்தூர் செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (37). இவரது மனைவி வரலட்சுமி. ராகேஷ் பெங்களூருவில் கட்டிட பணியில் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி செவிலியர் பயிற்சி படித்து வருகிறார். நேற்று காலை ராகேஷ் வங்கிக்கு சென்றார். அவரது மனைவி செவிலியர் பயிற்சிக்காக சென்றார். பகல் 11 மணி அளவில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வீட்டுக்கு வந்த அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம், 42 இன்ச் டி.வி. போன்றவை மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ராகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story