காஷ்மீரில் தென்காசி ராணுவ வீரர் மரணம்: உண்மை நிலையை தெரிவிக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


காஷ்மீரில் தென்காசி ராணுவ வீரர் மரணம்: உண்மை நிலையை தெரிவிக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Oct 2020 12:01 AM GMT (Updated: 14 Oct 2020 12:01 AM GMT)

காஷ்மீரில் தென்காசி ராணுவ வீரர் எப்படி இறந்தார்? என்பது குறித்து உண்மை நிலையை தெரிவிக்கக்கோரி அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பனவடலிசத்திரம்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆயாள்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (வயது 60). இவருடைய மனைவி அழகாத்தாள். இவர்களுடைய மகன் முல்லைராஜ் (வயது 29). ராணுவ வீரரான இவர் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் நவ்காம் என்ற இடத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அழகாத்தாளை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தான் முல்லைராஜூவுடன் பணிபுரிந்து வருவதாகவும், முல்லைராஜ் இறந்து விட்டதாகவும் கூறி உள்ளார். ஆனால், அதன்பிறகு அந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் முல்லைராஜின் கதி என்னவென்று தெரியாமல் குழப்பம் அடைந்த அழகாத்தாள், அதுகுறித்து முறையான தகவல் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளனிடம் மனு கொடுத்தார். இதையடுத்து நேற்று முன்தினம் அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ஆயாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் சங்கரன்கோவில்-நெல்லை சாலையில் ஆயாள்பட்டி விலக்கில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டார். முல்லைராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும், அவருடைய பெற்றோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, தாசில்தார் திருமலைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், முல்லைராஜ் மரணம் குறித்து உண்மையான தகவல் தெரிந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்து விட்டனர்.

ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதையடுத்து அவர்களுடன் ராணுவ சுபேதார்கள் சக்திவேல், ராஜூ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், ‘முதல்கட்ட விசாரணையில் முல்லைராஜ் மார்பு பகுதியில் குண்டடி பட்டு இறந்தது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் விசாரணைக்கு பிறகுதான் முழுமையான விவரம் தெரியவரும்‘ என்று தெரிவித்தனர். மேலும் முல்லைராஜூடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் சார்பில் அவரது பெற்றோருக்கு ரூ.74 ஆயிரம் வழங்கப்படும் என்றும், முல்லைராஜ் குடும்பத்தினருக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடல் தகனம்

இந்த நிலையில் முல்லைராஜ் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான ஆயாள்பட்டியில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு முல்லைராஜின் உடலுக்கு ராணுவத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர், சங்கரன்கோவில் தாசில்தார் திருமலைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து முல்லைராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Next Story