ஓடும் காரில் திடீர் தீ தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் உடல் கருகி பலி கிருமிநாசினியால் தீ பரவியதா? போலீஸ் விசாரணை


ஓடும் காரில் திடீர் தீ தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் உடல் கருகி பலி கிருமிநாசினியால் தீ பரவியதா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2020 9:26 PM GMT (Updated: 15 Oct 2020 9:26 PM GMT)

நாசிக் அருகே ஓடும் காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் உடல் கருகி பலியானார். காரில் இருந்த கிருமிநாசினியால் தீ பரவி விபத்து ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசிக்,

நாசிக் சாக்கோர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் ஷிண்டே. இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தாலுகா துணை தலைவராக இருந்து வந்தார். மேலும் திராட்சை பழங்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை விவசாய தோட்டத்திற்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்க தனது காரில் பிம்ளேகாவ் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பஸ்வந்த் சுங்கச்சாவடி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் தீப்பிடித் தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மள, மளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

கட்சி பிரமுகர் பலி

இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சய் ஷிண்டே காரின் கதவை திறந்து தப்பிக்க முயன்றார். அது முடியாமல் போனதால் காருக்குள்ளே தீயில் சிக்கி அவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்தநிலையில் தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காரில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். பின்னர் காருக்குள் கருகிக்கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும், கிருமிநாசினி பாட்டில் காரில் இருந்ததால் தீ மின்னல் வேகத்தில் பரவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story