நெல்லையில் இருந்து மும்பை, பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல்


நெல்லையில் இருந்து மும்பை, பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Oct 2020 11:43 PM GMT (Updated: 16 Oct 2020 11:43 PM GMT)

நெல்லையில் இருந்து மும்பை, பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல்லை,

கொரோனா பரவலையொட்டி கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் வேகம் குறைந்திருப்பதால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி பல்வேறு நகரங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவரவர் ஏற்கனவே வேலை செய்த, குடியிருந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் அதை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இதையொட்டி பண்டிகை கால சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நெல்லைக்கு ரெயில்கள் குறைவு

இதில் நெல்லை வழியாக ஒரேயொரு சிறப்பு ரெயில் மட்டுமே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது சென்னை எழும்பூர் -நாகர்கோவில் இடையே நெல்லை வழியாக ஒரேயொரு சிறப்பு ரெயில், அதுவும் 5 நடை மட்டுமே இயக்கப்படுகிறது.

நெல்லை வழியாக நெல்லை -சென்னை எழும்பூர், கன்னியாகுமரி -எழும்பூர், புனலூர் -எழும்பூர் மற்றும் திருச்சி -நாகர்கோவில் இடையே 4 சிறப்பு ரெயில்கள் தினசரி ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, சென்னை வழியாக ஹவுரா வரை வாரத்தில் ஒரு நாள் மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, பெங்களூரு...

ஆனால், நெல்லையில் இருந்து அல்லது நெல்லை வழியாக மராட்டிய மாநில தலைநகர் மும்பை, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவுக்கு இதுவரை எந்தவித ரெயில் சேவையும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தை சேர்ந்த, அதுவும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் மும்பை மற்றும் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் கொரோனாவால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊர்களுக்கு வந்து சென்றார்கள். இந்த நிலையில் பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக மும்பை மற்றும் பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோல், நாகர்கோவில் -கோயம்புத்தூர் இடையேயும் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் மும்பை, பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்களை குறிப்பிட்ட நாட்களில் மட்டுமாவது இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Next Story