தனியார் மென்பொருள் நிறுவனத்துடன் ஆலோசனை: கிராமப்புற இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு


தனியார் மென்பொருள் நிறுவனத்துடன் ஆலோசனை: கிராமப்புற இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 16 Oct 2020 11:58 PM GMT (Updated: 16 Oct 2020 11:58 PM GMT)

தென்காசி அருகே தனியார் மென்பொருள் நிறுவனத்துடன் ஆலோசனை கூட்டம் நடத்திய அமைச்சர் உதயகுமார், கிராமப்புற இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தென்காசி,

தென்காசி அருகே மத்தளம்பாறையில் ‘சோஹோ’ என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று மதியம் வந்தார். பின்னர் அவர், தகவல் தொழில்நுட்பத்துறையில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வேலைவாய்ப்புகளை பெறுவது சம்பந்தமாக, அந்த நிறுவன இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாவட்ட கலெக்டர்கள் அருண் சுந்தர் தயாளன் (தென்காசி), வினய் (மதுரை), எம்.எல்.ஏ.க்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), மனோகரன் (வாசுதேவநல்லூர்), சரவணன் (மதுரை தெற்கு) மற்றும் மென்பொருள் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசும்போது கூறியதாவது:-

அரசு முழு ஒத்துழைப்பு

தென்காசி மாவட்டத்தின் கிராமப்புறத்தில் மென்பொருள் நிறுவனம் அமைத்து, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இந்த நிறுவனத்தை பாராட்டுகிறேன். இதுபோன்ற மென்பொருள் நிறுவனங்களை விமான நிலையம் அருகிலும், 5 நட்சத்திர ஓட்டல் அருகிலும் அமைக்க வேண்டும் என்றுதான் அனைவரும் இடம் பார்க்கிறார்கள்.

ஆனால், இந்த நிறுவனத்தின் உரிமையாளர், தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாசாரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், தென்காசி அருகில் கிராமப்புறத்தில் மென்பொருள் நிறுவனத்தை அமைத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து வருகிறார். மேலும் அதிகமான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலைவாய்ப்பு பயிற்சி

திறமையான இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க அரசிடம் திட்டங்கள் உள்ளன. இதேபோன்று ஆதி திராவிடர் நலத்துறையிலும் சிறப்பு திட்டங்கள் உள்ளன. இந்த கூட்டத்திற்கு பிறகு அலுவலக ரீதியாக ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு அளிப்பது? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன.

தற்போது தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் எந்த பணியும் நடைபெற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த சோஹோ நிறுவனத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மென்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் மின்சார கார்களுக்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்கள், இங்கிருந்துதான் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றபோது, ‘சோஹோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுங்கள் என்று முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஆலோசனை நடத்தினோம்.

இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அரசும் ஒத்துழைப்பு அளித்து, கிராமப்புறத்தில் உள்ள அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிறுவனத்தின் கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது.

தென்காசி கலெக்டர் அலுவலக இடம்

தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் எந்த இடம்? என்று முடிவு செய்யப்படவில்லை. அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை கூறி உள்ளார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் வசதியாக வந்து செல்லும் வகையில், நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர செயலாளர்கள் சுடலை, கணேஷ் தாமோதரன், கார்த்திக் குமார், குற்றாலம் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சாமிநாத பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story