நெல்லையில் 40 கல்லறைகள் சேதம் பொதுமக்கள் சாலை மறியல்-8 பேர் கைது


நெல்லையில் 40 கல்லறைகள் சேதம் பொதுமக்கள் சாலை மறியல்-8 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2020 11:07 PM GMT (Updated: 18 Oct 2020 11:07 PM GMT)

நெல்லையில் 40 கல்லறைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவில் அருகில் 2 கிறிஸ்தவ கல்லறை தோட்டங்கள் உள்ளன. அந்த பகுதியில் கோவில் இருப்பதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று அந்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஒரு கல்லறை தோட்டத்தில் தற்போது உடல்கள் அடக் கம் செய்யப்படுவதில்லை. ஆனால் மற்றொரு கல்லறை தோட்டத்தில் தொடர்ந்து உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் கல்லறை தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள சுற்றுச்சுவரும் கடப்பாரையால் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

நேற்று காலையில் அந்த வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றவர்கள் கல்லறைகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

சாலை மறியல்

இதற்கிடையே, கல்லறைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பு மக்கள் தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு இடையே கல்லறையை சேதப்படுத்தியதாக ஒரு தரப்பை சேர்ந்த ஒருவரை போலீசார் விசாரணைக்காக தச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுபற்றி அறிந்த இந்து முன்னணியினர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் பிடித்து வந்தவரை விடுவித்தனர். இந்த சம்பவங்களால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் (வயது 52), அய்யப்பன், துரை உள்பட 8 பேரை நேற்று இரவு கைது செய்தனர்.

Next Story