சென்னையில் புதிதாக 885 பேருக்கு தொற்று தமிழகத்தில் 8-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது


சென்னையில் புதிதாக 885 பேருக்கு தொற்று தமிழகத்தில் 8-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 19 Oct 2020 11:17 PM GMT (Updated: 19 Oct 2020 11:17 PM GMT)

தமிழகத்தில் 8-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று 83 ஆயிரத்து 625 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 95 ஆண்கள், 1,441 பெண்கள் என மொத்தம் 3,536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 27 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 885 பேரும், கோவையில் 290 பேரும், செங்கல்பட்டில் 241 பேரும் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 15 பேரும், அரியலூரில் 12 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 87 லட்சத்து 80 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 216 ஆண்களும், 2 லட்சத்து 73 ஆயிரத்து 688 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 25 ஆயிரத்து 73 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 86 ஆயிரத்து 27 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

49 மாவட்டங்கள்

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 24 பேரும், தனியார் மருத்துவமனையில் 25 பேரும் என 49 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 16 பேரும், மதுரை, செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தலா இருவரும், கோவை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், நாமக்கல், நீலகிரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பூர், வேலூரில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 691 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

4,515 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 515 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,236 பேரும், செங்கல்பட்டில் 297 பேரும், சேலத்தில் 241 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 152 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 38 ஆயிரத்து 93 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story