மராட்டியத்தில் மேலும் 8 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா புனே நகரில் புதிதாக 334 பேர் மட்டுமே பாதிப்பு


மராட்டியத்தில் மேலும் 8 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா புனே நகரில் புதிதாக 334 பேர் மட்டுமே பாதிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 9:10 PM GMT (Updated: 20 Oct 2020 9:10 PM GMT)

மராட்டியத்தில் புதிதாக 8 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புனே மாநகராட்சி பகுதியில் மேலும் 334 பேர் மட்டுமே பாதிப்பு அடைந்துள்ளனர்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் 3½ மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாநிலத்தில் பாதிப்பு அதிரடியாக குறைந்தது. அன்று 5 ஆயிரத்து 984 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அதாவது 3½ மாதங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 8 ஆயிரத்து 151 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 9 ஆயிரத்து 516 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 லட்சத்து 92 ஆயிரத்து 308 பேர் குணமடைந்து உள்ளனர்.

நேற்று மட்டும் மாநிலத்தில் 7 ஆயிரத்து 429 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 74 ஆயிரத்து 265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

213 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் புதிதாக 213 பேர் நோய் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மராட்டியத்தில் இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 453 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 82 லட்சத்து 51 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 19.51 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் 24 லட்சத்து 34 ஆயிரத்து 687 பேர் வீடுகளிலும், 23 ஆயிரத்து 488 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புனேயி்ல் வீழ்ச்சி

மாநிலத்தில் பாதிப்பு அதிகம் இருந்த புனேயில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிரடியாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. புனே மாநகராட்சி பகுதியில் நேற்று புதிதாக 334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை அங்கு 1 லட்சத்து 68 ஆயிரத்து 736 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story