போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர், தொழில்அதிபரிடம் போலீஸ் விசாரணை


போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர், தொழில்அதிபரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2020 9:58 PM GMT (Updated: 21 Oct 2020 9:58 PM GMT)

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர், தொழில்அதிபரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முன்னாள் மந்திரியின் மகன் ஆதித்யா ஆல்வா, தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் உள்ளிட்டோரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மேலும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர், நடிகைகள், தொழில்அதிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஜெகதீஷ், அவரது மனைவி சவுந்தர்யா மற்றும் தொழில்அதிபரான கணேஷ்ராவ் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்திருந்தனர். தயாரிப்பாளர் ஜெகதீஷ் பல்வேறு கன்னட படங்களை தயாரித்துள்ளார்.

தம்பதியிடம் விசாரணை

இதையடுத்து, பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு நேற்று காலையில் ஜெகதீஷ் தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜரானார். அவர்களிடம், இன்ஸ்பெக்டர் புனித் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதாவது தயாரிப்பாளரான ஜெகதீஷ், அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து யஷ்வந்தபுரத்தில் பப் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த பப்பில் நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகள் நடந்ததாகவும், அங்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதாகி உள்ள நடிகை ராகிணியும் ஜெகதீசுக்கு சொந்தமான பப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தது பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாகவும், அவரது பப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை தம்பதியிடம் விசாரணை நடத்தி போலீசார் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக...

இதுபோல, தொழில்அதிபராக இருந்து வரும் கணேஷ்ராவும் நேற்று காலையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். கணேஷ்ராவுக்கு சொந்தமாக வணிகவளாகம் இருக்கிறது. அங்கு விருந்து நிகழ்ச்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தயாரிப்பாளர், தொழில்அதிபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணைக்கு பின்பு 3 பேரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story