பண்ட்வால் டவுனில் பயங்கரம் பிரபல கன்னட நடிகர் படுகொலை


பண்ட்வால் டவுனில் பயங்கரம் பிரபல கன்னட நடிகர் படுகொலை
x
தினத்தந்தி 21 Oct 2020 10:04 PM GMT (Updated: 21 Oct 2020 10:04 PM GMT)

பண்ட்வால் டவுனில் பிரபல கன்னட நடிகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பா.ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரா பண்ட்வால் (வயது 40). இவர் பிரபல கன்னடம், துளு மொழி திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவரது பெயர் பண்ட்வால் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இவர் பி.சி.ரோடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது. ஆனால் சுரேந்திராவின் நடமாட்டம் நீண்ட நேரமாக இல்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

கொலை

அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், பண்ட்வால் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான சுரேந்திரா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.

முன்விரோதத்தில் கொலை?

அதாவது கொலையான சுரேந்திரா குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரது பெயர் ரவுடி பட்டியலில் இருந்துள்ளது. இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு சுரேந்திரா, பண்ட்வால் பி.சி.ரோடு பகுதியில் பா.ஜனதா பிரமுகரை கொலை செய்ய அரிவாளுடன் ஓட, ஓட விரட்டினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திராவை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். சமீபத்தில் தான் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் பா.ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற முன்விரோதத்தில் பா.ஜனதா பிரமுகர் இந்த கொலையை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதுபோல் கொலையான சுரேந்திராவுக்கு ஒரு சிலருடன் பணம்- கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக பண்ட்வால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story