நெல்லையில் ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை தம்பி மகன் உள்பட 4 பேர் போலீசில் சரண்-பரபரப்பு தகவல்


நெல்லையில் ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை தம்பி மகன் உள்பட 4 பேர் போலீசில் சரண்-பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 11:49 PM GMT (Updated: 21 Oct 2020 11:49 PM GMT)

நெல்லையில் ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தம்பி மகன் உள்பட 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

நெல்லை,

நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டி வட்டக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 55), தொழிலாளி. இவரது குடும்பத்துக்கும், இவரது தம்பி சண்முகவேல் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் சுடலைமணி தனது மோட்டார் சைக்கிளில் தச்சநல்லூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள குளக்கரைக்கு வந்தார். அப்போது சண்முகவேல் மகன் முத்துக்குமார் (22), அவரது நண்பர்கள் ராம்சூர்யா (20), தெய்வேந்திரன் (19), ஹரிகரன் (20) ஆகியோர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

வெட்டிக் கொலை

அவர்களை பார்த்ததும் சுடலைமணி தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டியது. போலீஸ் நிலையம் பின்புறப்பகுதியில் சுடலைமணியை சுற்றிவளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகவும், கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அந்த பகுதிக்கு ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டது. இதற்கிடையே, உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த சுடலைமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த பயங்கர கொலை குறித்து தச்சநல்லூர் போலீசுக்கும், சுடலைமணி குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த சுடலைமணி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு தகவல்கள்

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

அதாவது, சுடலைமணி தம்பி சண்முகவேலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சுடலைமணி செய்வினை வைத்ததால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டது என சண்முகவேல் குடும்பத்தினர் கருதினர்.

இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த தகராறு தொடர்பாக சுடலைமணி, சண்முகவேல் மகன் முத்துக்குமார் ஆகியோர் மீது மானூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சுடலைமணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் சரண்

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 4 பேரை தேடி வந்தனர். இதை அறிந்த முத்துக்குமார், ராம்சூர்யா, தெய்வேந்திரன், ஹரிகரன் ஆகிய 4 பேரும் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story