குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சம் கொள்ளை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை


குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சம் கொள்ளை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2020 11:54 PM GMT (Updated: 21 Oct 2020 11:54 PM GMT)

குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வள்ளுவன் புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கபூர் (வயது 35). இவர் கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள நன்னகரத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் (43) என்பவருக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங்க பேசியுள்ளார்.

இதற்காக முன்பணமாக ரூ.45 லட்சத்தை கொடுப்பதற்காக அப்துல் கபூர் கொண்டு வந்தார். அவரிடம், குற்றாலம் மின்நகர் பகுதிக்கு வருமாறு நாகூர்மீரான் கூறினார்.

ரூ.45 லட்சம் பறிப்பு

இதைத்தொடர்ந்து அப்துல் கபூர் அங்கு பணத்துடன் சென்றார். அப்போது காரில் வந்த நாகூர்மீரான், கழுகுமலை பகுதியைச் சேர்ந்த அனில்குமார் (50), கேரள மாநிலம் கருநாகப்பள்ளியை சேர்ந்த நாசிர் (48), இலஞ்சியைச் சேர்ந்த மணிகண்டன் (29), சதீஷ்குமார் (23) ஆகியோர் அப்துல் கபூரிடம் கத்தியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் அவர் வைத்து இருந்த ரூ.45 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்துல் கபூர் குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பல்வேறு இடங்களில் தேடினார்கள். பின்னர் அவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story