தூத்துக்குடியில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி


தூத்துக்குடியில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 22 Oct 2020 6:18 PM GMT (Updated: 22 Oct 2020 6:18 PM GMT)

நாடு முழுவதும் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு, தூத்துக்குடியில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுத்தூணில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி, 

1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி லடாக் பகுதியில் ரோந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேரை சீன ராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் நேற்று வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

துப்பாக்கி குண்டு...

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூணில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து, கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பணியில் இருந்த போது இறந்த 271 பேருக்கும் அஞ்சலி செலுத்தினார். அப்போது 3 முறை துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பணியின் போது உயிர் நீத்த போலீசார், விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்றும், அவர்களின் தியாகம் வீண்போகாது என்றும், தியாகத்தை போற்றும் வகையிலும் உறுதி மொழி ஏற்றனர். பின்னர் நினைவுத்தூணில் போலீசார் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு கோபி, தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ் (தூத்துக்குடி நகரம்) , பொன்னரசு (புறநகர்) , வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்) , காட்வின் ஜெகதீஷ் (சாத்தான்குளம்) , பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் (விளாத்திகுளம்) , சங்கர் (மணியாச்சி) , கலைக்கதிரவன் (கோவில்பட்டி) , இளங்கோவன் (நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு) , கண்ணபிரான் (ஆயுதப்படை) , உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அபிஷேக் குப்தா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story