நாகர்கோவிலில் கஞ்சாவில் தயாரித்த போதை எண்ணெய் விற்பனை; 3 பேர் கைது - வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்


நாகர்கோவிலில் கஞ்சாவில் தயாரித்த போதை எண்ணெய் விற்பனை; 3 பேர் கைது - வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்
x
தினத்தந்தி 23 Oct 2020 9:23 AM GMT (Updated: 23 Oct 2020 9:23 AM GMT)

நாகர்கோவிலில் கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்படும் போதை எண்ணெய் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும், அதனை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் பரமார்த்தலிங்கபுரம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கும்பல் காரில் வைத்து போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்ததும், அந்த போதை பொருளை சிலர் வாங்கி பயன்படுத்தி கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் போதைப் பொருள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, அவர்களை வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போதைப் பொருள் விற்பனை செய்தவர்கள் குலசேகரம் அருகில் உள்ள கைதபுரம் அய்யங்காலவிளையைச் சேர்ந்த கோகுல்கிருஷ்ணன் (வயது 29), முட்டோடு பகுதியைச் சேர்ந்த அனிஷ் (26), நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுன் தெருவைச் சேர்ந்த பிரவீன் (26) ஆகியோர் என்பதும், அந்த போதை பொருளை வாங்கி பயன்படுத்தியவர்கள் வடசேரி கல்படி தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (22), இருளப்பபுரத்தைச் சேர்ந்த கோகுல் (25), வாத்தியார்விளையைச் சேர்ந்த சரவணன் (27), கோணத்தைச் சேர்ந்த கிரீஸ் (23), ராணித்தோட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஆலன்குமார் (22) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் விற்பனை செய்தவர்களிடம் இருந்து ஆஷிஷ் ஆயில் என்ற திரவ போதைப் பொருள் 130 கிராம், அவற்றை உபயோகிக்கப் பயன்படும் ஊசிகள், ஓ.சி.பி. விர்ஜின் வேபர் பேப்பர் 103 ஆகியவையும், சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆஷிஷ் ஆயில் கஞ்சா செடியின் சில பாகங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணெய் கர்நாடகா மற்றும் மராட்டியம் மாநிலங்களில் தான் கிடைக்கும் எனத் தெரிகிறது. அங்கிருந்து கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு டப்பாவில் 50 கிராம் அளவுக்குத்தான் போதை எண்ணெய் இருக்கும். ஒரு டப்பா விலை ரூ.30 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதனை ரூ.60 ஆயிரம் வரையில் இந்த கும்பல் விற்பனை செய்துள்ளது.

போதை எண்ணெய் விற்பனை செய்த 3 பேரும் 3 டப்பாக்களில் போதை எண்ணெயை விற்பனை செய்ய வைத்திருந்தனர். அதில் ஒரு பாட்டிலில் 20 கிராம் விற்பனை செய்தது போக மீதம் 130 கிராம் இருந்தது. அதைத்தான் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த எண்ணெயை சிகரெட்டில் உள்ள புகையிலையை அகற்றிவிட்டு, விர்ஜின் வேபர் பேப்பரில் தடவி புகையிலை அகற்றப்பட்ட சிகரெட் பேப்பருக்குள் திணித்து பற்றவைத்து புகையை உள் இழுத்தால் அரை மணி நேரத்தில் போதை ஏறிவிடும் என்று விற்பனை செய்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிடிபட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் வாங்கி பயன்படுத்திய 5 பேரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மற்ற 3 பேரையும் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி மற்றும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை எண்ணெய் மற்றும் காரின் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் யார்? இவர்கள் நேரடியாக கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து போதை எண்ணெயை வாங்கி வந்து விற்பனை செய்தார்களா? அந்த மாநிலங்களைச் சேர்ந்த கும்பல் இவர்களுக்கு அனுப்பி வைக்கிறதா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், தற்போது போதையில் புதுமையாக போதை எண்ணெயை பயன்படுத்த தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story