தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை


தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2020 8:31 PM GMT (Updated: 23 Oct 2020 8:31 PM GMT)

தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வேல்முருகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள அரசு வெளியிட்ட மற்றும் அவ்வப்போது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை மூலம் தங்களுக்கு தெரியப்படுத்திய வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றும்படி நிர்வாகங்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

அதன்படி தொழிற்சாலைகளுக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும் தவறாமல் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேலும் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து தொழிலாளர்கள், இதர நபர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடும் நடவடிக்கை

தகுந்த எண்ணிக்கையில் சானிடைசர் தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட வேண்டும். அவ்வப்போது தொழிலாளர்கள் கைகளை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முக கவசம் அளிக்கப்பட்டு அதை அவர்கள் அணிந்து பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.

தனிமனித இடைவெளி தொழிற்சாலைகளில் தவறாது கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கென ஒரு அலுவலரை நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும். திடீர் ஆய்வுகளின்போது, முரண்பாடுகள் அறியப்பட்டாலோ, மேற்கண்ட செயல்முறைகள் நடைமுறையில் இல்லாமல் இருந்தாலோ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

Next Story