புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு பாதிப்பு மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து 89 சதவீதம் பேர் மீண்டனர்


புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு பாதிப்பு மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து 89 சதவீதம் பேர் மீண்டனர்
x
தினத்தந்தி 24 Oct 2020 11:00 PM GMT (Updated: 24 Oct 2020 11:00 PM GMT)

மராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 88.78 சதவீதம் பேர் குணமடைந்தனர்.

மும்பை,  

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 38 ஆயிரத்து 961 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 14 லட்சத்து 55 ஆயிரத்து 107 பேர் குணமடைந்துவிட்டனர். நேற்று மட்டும் 10 ஆயிரத்து 4 போ் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் குணமானவர்கள் சதவீதம் 88.78 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரத்து 194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

137 பேர் பலி

மராட்டியத்தில் புதிதாக 137 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை 43 ஆயிரத்து 152 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 85 லட்சத்து 48 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.17 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 25 லட்சத்து 3 ஆயிரத்து 510 பேர் வீடுகளிலும், 14 ஆயிரத்து 170 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புனேயில் குறைந்தது

புனே பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து உள்ளது. இதில் புனே மாநகராட்சியில் 336 பேருக்கும், புறநகரில் 305 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டியில் 167 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தானேயை பொறுத்தவரை கல்யாண் டோம்பிவிலியில் 222 பேருக்கும், தானே மாநகராட்சி பகுதியில் 209 பேருக்கும், நவிமும்பையில் 209 பேருக்கும் புதிதாக வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

Next Story