புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்தது 29 ஆயிரத்து 600 பேர் மீண்டனர்


புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்தது 29 ஆயிரத்து 600 பேர் மீண்டனர்
x
தினத்தந்தி 25 Oct 2020 1:56 AM GMT (Updated: 25 Oct 2020 1:56 AM GMT)

புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து வருகிறது. இதுவரை 29 ஆயிரத்து 600 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் புதுவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. முதல் மாதத்தில் 50 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். அடுத்தடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என யாரையும் தொற்று விட்டு வைக்காமல் பரவியது. இதையடுத்து அரசு சார்பில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தினந்தோறும் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. அதேபோல் சராசரியாக 15 பேர் வரை உயிரிழந்தனர். ஒருகட்டத்தில் தேசிய அளவை விட புதுவை மாநிலத்தில் பாதிப்பு சதவீதம் அதிகமாக உயர்ந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிரடியாக குறைந்தது

இதனைதொடர்ந்து மத்திய நிபுணர்கள் குழுவினர் புதுவைக்கு வந்து பல்வேறு நிலைமையை நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் தெரிவித்த ஆலோசனையின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதாவது, இம்மாத (அக்டோபர்) தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது. உயிரிழப்பும் சரிந்தது.

அடுத்தடுத்த நாட்களில் தொற்று பாதித்தவர்களை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நிலைமை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

128 பேருக்கு கொரோனா

மாநிலம் முழுவதும் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 865 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 128 பேருக்கு தொற்று உறுதியானது. 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 85 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 34 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 3 ஆயிரத்து 912 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,577 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 335 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 29 ஆயிரத்து 614 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிலேயே முதலிடம்

இதுவரை 586 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 484 பேர் புதுச்சேரியையும், 54 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 6 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். நேற்று கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வம்பா கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த 38 வயது ஆணும், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காமராஜ் நகர் நாராயணதாஸ் வீதியை சேர்ந்த 67வயது முதியவரும் பலியாகி உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.72 சதவீதமாகவும், குணமடைவது 86.81 சதவீதமாகவும் உள்ளது. கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே புதுவை முதல் இடத்தில் உள்ளது. நேற்று வரை 2 லட்சத்து 80 ஆயிரத்து 35 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது இங்குள்ள மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கும் போது 18 சதவீதமாகும். இன்னும் ஒருசில நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிவிடும். 

Next Story