8 பஞ்சாயத்துகளில் ரூ.4¾ கோடியில் கூட்டமைப்பு கட்டிடங்கள் தளவாய்சுந்தரம் தகவல்


8 பஞ்சாயத்துகளில் ரூ.4¾ கோடியில் கூட்டமைப்பு கட்டிடங்கள் தளவாய்சுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2020 5:34 AM GMT (Updated: 25 Oct 2020 5:34 AM GMT)

குமரி மாவட்டத்தில் 8 பஞ்சாயத்துகளில் ரூ.4¾ கோடி மதிப்பில் கூட்டமைப்பு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக தளவாய்சுந்தரம் கூறினார்.

நாகர்கோவில், 


குமரி மாவட்டத்தில் பல்வேறு கிராமப்புற பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தங்களது பகுதிகளில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த, ஊராட்சி கட்டிடங்கள் கட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு எடுத்து சென்றதன் அடிப்படையில், மாவட்டத்தில், 10 பஞ்சாயத்துகளில், கூட்டமைப்பு கட்டிடங்கள் கட்ட அனுமதி அளித்தார்.

இதில், ஏற்கனவே கோவளம் பஞ்சாயத்தில் ஏழுசாட்டுப்பத்திலும், தர்மபுரம் பஞ்சாயத்தில் திக்கிலான்விளையிலும் கூட்டமைப்பு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும் 8 கட்டிடங்கள்

தற்போது, ரூ.4.80 கோடி மதிப்பில் மேலும் 8 கூட்டமைப்பு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதன்படி அகஸ்தீஸ்வரம் யூனியன், ராமபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சமத்துவபுரத்திலும், தோவாளை யூனியன் சகாயநகர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆசிரியர் காலனியிலும், செண்பகராமன்புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்குத்தெரு முத்தாரம்மன் கோவில் அருகேயும், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், கேசவன்புத்தன்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட புத்தன்துறையிலும், திருவட்டார் யூனியன், பேச்சிப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணியன்குழியிலும், கிள்ளியூர் யூனியன் மிடாலம் பஞ்சாயத்திலும், மேல்புறம் யூனியன் தேவிக்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட புன்னக்கரையிலும், மஞ்சாலுமூடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலுகுழியிலும் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு கட்டிடங்கள் கட்ட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அனுமதி அளித்து ஆணை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்று கிராமப்புறங்களில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு, எப்போதும் ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story