பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்


பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 27 Oct 2020 3:31 AM GMT (Updated: 27 Oct 2020 3:31 AM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஜோலார்பேட்டை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். வயது மூப்பில் உள்ள பெற்றோருடன் இருக்க அவரது தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு மாத பரோலில் 3-வது முறையாக கடந்த 9-ந்தேதி சென்னை புழல் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு பேரறிவாளன் வந்தார்.

அதைத்தொடந்து அவரது வீட்டை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பரோலில் வந்துள்ள பேரறிவாளனை ரத்த சம்பந்தமான உறவுகளை தவிர்த்து வெளியாட்கள் பார்ப்பதற்கு அனுமதியில்லை. கொரோனா தொற்று காரணமாக பேரறிவாளன் வீட்டிலிருந்து போலீஸ் நிலையம் வந்து கையெழுத்திடுவதை தவிர்த்து, நாள் தோறும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் போலீசார், பேரறிவாளன் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வருகின்றனர்.

சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்

மேலும் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று காரணமாக சிறையில் இருக்கும் போது அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேரறிவாளன் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து 6 மணி நேரம் சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஜோலார்பேட்டையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு திரும்பினார்.

Next Story