கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி - விழுப்புரத்தில் 39 பேருக்கு தொற்று


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி - விழுப்புரத்தில் 39 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 28 Oct 2020 2:15 PM GMT (Updated: 28 Oct 2020 1:55 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். விழுப்புரத்தில் நேற்று மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 10 ஆயிரத்து 170 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 ஆயிரத்து 850 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 102 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்வராயன்மலை பகுதி எருமம்பட்டு கிராமத்தை சேர்ந்த 47 வயது ஆண் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 102-ல் இருந்து 103ஆக உயர்ந்தது. நேற்று 670 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 23 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 170-ல் இருந்து 10 ஆயிரத்து 193-ஆக உயர்ந்தது.

அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 106 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 250-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் 39 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story