தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைகிறது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது


தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைகிறது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 29 Oct 2020 3:16 AM GMT (Updated: 29 Oct 2020 3:16 AM GMT)

தமிழகத்தில் தொடர்ந்து 16-வது நாளாக தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மேலும் கொரோனா உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,508 ஆண்கள், 1,008 பெண்கள் என மொத்தம் 2,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 93 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 346 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 688 பேரும், கோவையில் 218 பேரும், ஈரோட்டில் 155 பேரும், செங்கல்பட்டில் 150 பேரும், சேலத்தில் 147 பேரும், திருவள்ளூரில் 138, குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 94 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 620 ஆண்களும், 2 லட்சத்து 84 ஆயிரத்து 099 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 32 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 25 ஆயிரத்து 555 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 88 ஆயிரத்து 278 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

35 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 19 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 35 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 9 பேரும், கோவையில் 7 பேர், செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர், திருப்பூரில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், காஞ்சீபுரம், கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 17 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 11,018 பேர் உயிரிழந்துள்ளனர்.

3,859 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 859 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 957 பேரும், கோவையில் 685 பேரும், செங்கல்பட்டில் 231 பேரும், சேலத்தில் 186 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 26 ஆயிரத்து 356 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 925 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 982 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 342 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 16-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story