ஈரோட்டில் மதுபோதையில் பயங்கரம் கழுத்தை அறுத்து தொழிலாளி படுகொலை சேலத்தை சேர்ந்தவர் கைது


ஈரோட்டில் மதுபோதையில் பயங்கரம் கழுத்தை அறுத்து தொழிலாளி படுகொலை சேலத்தை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2020 5:10 AM GMT (Updated: 30 Oct 2020 5:10 AM GMT)

ஈரோட்டில் மதுபோதையில் கழுத்தை அறுத்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

ஈரோடு, 

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பிருந்தா வீதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிளேடு அல்லது கூர்மையான ஆயுதத்தினால் கழுத்து அறுக்கப்பட்டு அந்த நபர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஆனால், இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவரை கொலை செய்தது யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

விசாரணை

இதைத்தொடர்ந்து போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 40) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசார் லட்சுமணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

ரத்தம் சொட்ட சொட்ட...

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பெருமாள் (42) என்பது தெரிய வந்தது. மேலும் பெருமாளுக்கும், லட்சுமணனுக்கும் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மணிக்கூண்டு விநாயகர் கோவில் அருகே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

பின்னர் பெருமாள், லட்சுமணனை தள்ளி விட்டுள்ளார். அப்போது அவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் பிளேடால் பெருமாளின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த பெருமாள், ரத்தம் சொட்ட, சொட்ட ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக நடந்து சென்று பிருந்தா வீதியில் மயங்கி விழுந்து, இறந்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.

மதுபோதையில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story