பசும்பொன்னில் குருபூஜை விழா: முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை - பல்வேறு கட்சி தலைவர்களும் திரண்டனர்


பசும்பொன்னில் குருபூஜை விழா: முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை - பல்வேறு கட்சி தலைவர்களும் திரண்டனர்
x
தினத்தந்தி 30 Oct 2020 10:30 PM GMT (Updated: 31 Oct 2020 3:27 AM GMT)

பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் குருபூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இதே போல் பல்வேறு கட்சி தலைவர்களும் திரண்டு மரியாதை செலுத்தினார்கள்.

கமுதி, 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜையும் நடைபெறும். இதில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை வந்து தங்கினார்.

நேற்று காலையில் காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு 9.20 மணிக்கு பசும்பொன் வந்தார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன், ஓ.எஸ்.மணியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் உடன் வந்தனர். பின்னர் அனைவரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சதன்பிரபாகர், டாக்டர் மணிகண்டன், மதுரை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கமுதி காளிமுத்து, முதுகுளத்தூர் தர்மர், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் பெரியசாமி உள்பட அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி விழாவும், 58-வது குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் 1908-ம் ஆண்டு பிறந்தார். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்தார். இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து இளைஞர்களை திரட்டி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாக செம்மல் ஆவார்.

1920-ம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேவர் மேற்கொண்ட போராட்டம் அப்போது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது.

1937-ம் ஆண்டு மாநில தேர்தலில் ராமநாதபுரத்தில் இருந்து தேவர் போட்டியிட்டார். ஆங்கில அரசால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பலம் வாய்ந்த ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றி பெற்றவர். அதை தொடர்ந்து 1946-ம் ஆண்டு சென்னை மாகாணம் தேர்தலிலும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1948-ம் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார். 1937 முதல் 1962-வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு அத்தனை தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றவர்.

தேசியத்தையும், ஆன்மிகத்தையும் அடிப்படையாக கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு அவருக்கு தெய்வதிருமகனார் என்ற பெயரை பெற்று தந்தது. தேவர் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர் 30-ந் தேதி என்பது குறிப்பிட்டத்தக்கது. அவர் வாழ்ந்த நாட்கள் 20 ஆயிரத்து 75 நாட்கள், சிறையில் இருந்தது 4 ஆயிரம் நாட்கள். தேவர் பிறந்தநாளான அக்டோபர் 30-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்றைய தினத்தில் இருந்து ஆண்டு தோறும் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

1994-ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் தேவருக்கு முழுதிருவுருவ வெண்கல சிலையை ஜெயலலிதா அமைத்து திறந்து வைத்தார். மேலும் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தை சீரமைத்து தற்போது நினைவகம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அ.தி.மு.க. சார்பில் தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று 2010-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2014-ம் ஆண்டு ஜெயலலிதா பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவருக்கு அரசு விழா மற்றும் சென்னையில் முழு உருவ வெண்கல சிலை, பசும்பொன்னில் தேவருக்கு தங்க கவசம் என அவருக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் பணிகளை அ.தி.மு.க. தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேலும் அ.தி.மு.க. அரசால் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு, பால்குடம், முளைப்பாரி மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் கட்டிடம், குடிநீர்வசதி, பேவர்பிளாக் சாலை வசதி, பொதுக்கழிப்பிட வசதி என பல்வேறு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தேவருக்கு அனைத்து சிறப்புகளையும் செய்தது அ.தி.மு.க. அரசுதான் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தேவர் நினைவிடத்துக்கு சென்ற டி.டி.வி. தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் தலைமை நிலைய செயலாளர் கே.கே.உமாதேவன், மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. முதுகுளத்தூர் முருகன், மாவட்ட துணைச்செயலாளர் அபிராமம் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் கமுதி தெற்கு வேப்பங்குளம் முத்து, வடக்கு வி.கே.சி.முத்துராமலிங்கம், பசும்பொன் ஊராட்சி தலைவர் கே.டி.ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் போஸ் செல்வா, மாவட்ட தலைவர் மாரி செல்வம், மாவட்ட துணைத் தலைவர்கள் குருநாதன், செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலாளர்கள் அஜய்நாத், மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாரீஸ்வரன், கணேஷ்குமார், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சாயல்குடி ஷேக் முகமது, கமுதி கார்த்திக் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறும்போது, தேசியமும், தெய்வீகமும் இருகண்களாக வாழ்ந்தவர் தேவர் திருமகனார். ஏழை, எளிய மக்களுக்கு நிலங் களை தானமாக வழங்கியவர். அ.ம.மு.க. சார்பில் பசும்பொன் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தது சந்தோஷத்தை தருகிறது, என்றார். பின்னர் அவருக்கு பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் கே.டி.ராமகிருஷ்ணன் வீரவாள் நினைவுப்பரிசு அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க. நிர்வாகி கள் திரளாக கலந்துகொண்டனர்.

பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தி தொடர்பாளர் குப்புராமு, பி.டி.அரசகுமார், மாவட்ட தலைவர் முரளிதரன், சுப.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவித்து வாழ்ந்தவர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தேவரின் நினைவை போற்றி நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கப்பட்டது. தேசியத்தையும் தெய்வீகத்தையும் யார் ஒருவர் தன் வாழ்வில் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தான் தேவரின் உண்மையான வாரிசு. வெற்றிவேல் வீரவேல் யாத்திரையை கண்டு மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார்.

வேல் யாத்திரையினால் தனது கனவு கலைந்து விடுமோ என பயப்படுகிறார். அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர அதிக அளவில் இடம் பிடித்துள்ளார்கள். மாணவர்களை உற்சாகப்படுத்த, ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர பலவீன படுத்திவிடக்கூடாது. தமிழக மீனவர்கள் 2016-ம் ஆண்டு வரை இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். ஆனால் மோடி பிரதமரான பின்பு மீனவர்கள் எங்கும் கொல்லப்படவில்லை. மீனவர்களின் நலன் காப்பதில் மோடியின் அரசு தீவிரமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் அதன் துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, கமுதி ஒன்றிய செயலாளர் வேல்மயில் முருகன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து, எல்கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறும் போது, “பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விஜயகாந்த் உத்தரவிட்டதற்கு இணங்க அவரது சார்பில் தே.மு.தி.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினோம். விஜயகாந்த், பசும்பொன் தேவரின் மீது அதிக ஈடுபாடும் பாசமும் கொண்டவர். அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது எங்களுக்கு பெருமையாக உள்ளது. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தனித்து போட்டியா அல்லது கூட்டணியா? என்பதை பொதுக் குழு, செயற்குழு கூடி அனைவரின் கருத்தை கேட்டறிந்து முடிவு செய்வோம்” என்றார்.

அப்போது தே.மு.தி.க. ஒன்றிய துணைச் செயலாளர்கள் முத்து வழிவிட்டான், மருதுபாண்டி, ரவி, சிவா, ஒன்றிய இளைஞரணி கிருஷ்ணன், அபிராமம் அவைத் தலைவர் முருகன், பேரூர் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அதன் நிறுவன தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம் உள்பட நிர்வாகிகள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ம.தி.மு.க. நிர்வாகிகள் சிவகங்கை புலவர் செவந்தியப்பன், புதூர் பூமிநாதன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பேட்ரிக், ராமநாதபுரம் சுரேஷ் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தென்னாடு மக்கள் கட்சி தலைவர் கணேஷ் தேவர், புரட்சித்தலைவி பசுமை தமிழகம் அமைப்பின் தலைவர் வி.என்.சுந்தர்ராஜன், முவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஏ.எம்.மூர்த்தி தேவர் தலைமையிலான நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். இதே போல் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இதையொட்டி பசும்பொன் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Next Story