போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 1 Nov 2020 4:51 AM GMT (Updated: 1 Nov 2020 4:51 AM GMT)

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்நேற்று தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாகர்கோவில், 

நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று அனைத்து அரசு அலுவலகங்களில் நடந்தது.

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நத்தம் நிலவரித்திட்ட தாசில்தார் கண்ணன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி நவாஸ்கான் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் போலீசார், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழியை வாசிக்க, அதை அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக் கொண்டனர்.

இதேபோன்று குமரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

குமரி மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சிக்மா ஸ்போர்ட்ஸ் அன்ட் ஆர்ட்ஸ் மன்றம் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தினம் தோட்டவாரத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி கலந்து கொண்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். டாக்டர் ஸ்ரீகுமார், உடற்பயிற்சி ஆசிரியர் ஜெயசிங், மொபின் பிஜோ ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் இளையோர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை வளர்த்திட பேட்மின்டன் பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள், சிக்மா மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மன்ற தலைவர் டைட்டஸ் ராஜ், நிர்வாகிகள் ஜெர்லின், அஜீத், டேவிட்சன், சுஜின்லால், ஜீஜோ ஆகியோர் செய்திருந்தனர். 


Next Story