தொட்டியம் கடைவீதியில் சாலையை கடக்க அவதிப்படும் பொதுமக்கள் வேகத்தடை அமைக்க கோரிக்கை


தொட்டியம் கடைவீதியில் சாலையை கடக்க அவதிப்படும் பொதுமக்கள் வேகத்தடை அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2020 1:02 AM GMT (Updated: 6 Nov 2020 1:02 AM GMT)

தொட்டியம் கடைவீதியில் சாலையை கடக்க பொதுமக்கள் அவதிப்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொட்டியம், 

தொட்டியம் கடைவீதியில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் இருந்து பவளக்கடை வீதி மற்றும் சந்தைபேட்டை செல்லும் சாலை பிரிந்து செல்கின்றன. இந்த இரு சாலைகள் சந்திக்கும் இடத்தில் தொட்டியம் போலீஸ் நிலையம் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளன.

இதனால் இப்பகுதியில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பவள கடைவீதியில் இருந்து மெயின் ரோடு வழியாக சந்தைபேட்டை செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், நடந்து செல்லும்போதும் திருச்சி- நாமக்கல் சாலையை கடக்க வெகு நேரம் ஆகிறது.

அடிக்கடி விபத்து

எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் இச்சாலை வழியாக பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சென்று கொண்டே இருப்பதால் பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் கடைவீதிக்கு அதிகம் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

பின்னர் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து அதை ஒழுங்கு படுத்திய பிறகே போக்குவரத்து சீராகும். நான்கு முக்கிய சாலைகள் சந்திக்கும் இந்த இடத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் இருந்தால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் எந்தவித சிரமமும் இன்றி செல்ல முடியும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

2 இடங்களில் வேகத்தடை

தற்போது திருச்சி- நாமக்கல் சாலையில் பவளக்கடை வீதி மற்றும் சந்தப்பேட்டை செல்லும் பகுதியில் நான்கு புறமும் வேகத்தடை அமைத்தால் மட்டுமே விபத்துக்களை ஓரளவு குறைக்க முடியும். இதேபோல போலீஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள வாணப்பட்டறை கார்னரில் உள்ள ஆபத்தான வளைவில் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story