புதிதாக 2,362 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனாவுக்கு மேலும் 20 பேர் பலி


புதிதாக 2,362 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனாவுக்கு மேலும் 20 பேர் பலி
x
தினத்தந்தி 10 Nov 2020 6:57 PM GMT (Updated: 10 Nov 2020 6:57 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 2,362 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 48 ஆயிரத்து 850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 2,362 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரத்து 212 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் பாகல்கோட்டையில் 11 பேரும், பல்லாரியில் 34 பேரும், பெலகாவியில் 30 பேரும், பெங்களூரு புறநகரில் 55 பேரும், பெங்களூரு நகரில் 1,176 பேரும், பீதரில் 10 பேரும், சாம்ராஜ்நகரில் 13 பேரும், சிக்பள்ளாப்பூரில் 57 பேரும், சிக்கமகளூருவில் 42 பேரும், சித்ரதுர்காவில் 31 பேரும், தட்சிண கன்னடாவில் 87 பேரும், தாவணகெரேயில் 29 பேரும், தார்வாரில் 18 பேரும், கதக்கில் 6 பேரும், ஹாசனில் 110 பேரும், ஹாவேரியில் 13 பேரும், கலபுரகியில் 9 பேரும், குடகில் 7 பேரும், கோலாரில் 25 பேரும், கொப்பலில் 16 பேரும், மண்டியாவில் 86 பேரும், மைசூருவில் 135 பேரும், ராய்ச்சூரில் 24 பேரும், ராமநகரில் 27 பேரும், சிவமொக்காவில் 25 பேரும், துமகூருவில் 136 பேரும், உடுப்பியில் 27 பேரும், உத்தர கன்னடாவில் 20 பேரும், விஜயாப்புராவில் 78 பேரும், யாதகிரியில் 25 பேரும் உள்ளனர்.

கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் 8 பேர், பல்லாரியில் 2 பேர், பெங்களூரு புறநகரில் 3 பேர் உள்பட 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று 4,215 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 8 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. 31 ஆயிரத்து 63 பேர் சிகிச்சையில் உள்ளனர். 869 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 508 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 89 லட்சத்து 32 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story