பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் மகனே கற்பழித்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்


பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் மகனே கற்பழித்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 15 Nov 2020 11:22 PM GMT (Updated: 15 Nov 2020 11:22 PM GMT)

ஹாவேரி அருகே சிக்காவியில், பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணை அவரது மகனே கற்பழித்து கொன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹாவேரி,

ஹாவேரி மாவட்டம் சிக்காவி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாரவ்வா(வயது 39). இவரது மகன் சிவப்பா(21). கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாரவ்வா திடீரென்று காணாமல் போய் விட்டார். அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. அதே நேரத்தில் சிவப்பாவும் வீட்டுக்கு வராமல் இருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் கங்கிபாவி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் பாரவ்வா பிணமாக கிடந்தார். அவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சிக்காவி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாரவ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் தலைமறைவாக இருந்த சிவப்பாவையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையின்போது முதலில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது தாயை கொலை செய்ததாக சிவப்பா தெரிவித்தார். இருப்பினும் போலீசார் சிவப்பாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. திடீர் திருப்பங்களும் ஏற்பட்டது. அதாவது சிவப்பா, தனது தாயை கற்பழித்து கொன்றதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

அவர் தெரிவித்தது பற்றி போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசைக்கு இணங்குமாறு...

கடந்த 12-ந் தேதி சிவப்பா, தனது தாய் பாரவ்வாவை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பாரவ்வாவை தனது தாய் என்றும் பாராமல் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பாரவ்வா, சிவப்பாவை கடுமையாக திட்டி கண்டித்துள்ளார். ஆனால் அதை சிவப்பா கேட்கவில்லை.

மாறாக தனது தாய் பாரவ்வாவை அடித்து, உதைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து கடும் கோபமடைந்த சிவப்பா, பாரவ்வாவை கங்கிபாவி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பாரவ்வாவை கடத்திச் சென்று கற்பழித்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

பின்னர் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லி எங்கு தனது தாய் தன்னை போலீசில் மாட்டி விடுவாரோ? என்று கருதி அவர், பாரவ்வாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் பாரவ்வாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் மீண்டும் வந்துவிட்டார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சிவப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story