மும்பை மக்களின் நலனுக்காக மாநகராட்சி அதிகாரத்தில் இருந்து சிவசேனாவை வெளியேற்ற வேண்டும்


மும்பை மக்களின் நலனுக்காக மாநகராட்சி அதிகாரத்தில் இருந்து சிவசேனாவை வெளியேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 19 Nov 2020 10:51 PM GMT (Updated: 19 Nov 2020 10:51 PM GMT)

மும்பை மக்கள் நலனுக்காக மாநகராட்சி அதிகாரத்தில் இருந்து சிவசேனாவை வெளியேற்ற வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பை, 

நிதி தலைநகரான மும்பை மாநகராட்சியை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனா கட்சி தனது கைவசம் வைத்துள்ளது.

இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மும்பை பிரிவு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே பேசியதாவது:-

மும்பை மாநகராட்சியில் சிலரின் வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. ஊழலின் ராஜ்யத்தை நடத்தி வருகின்றனர். அவர்களை 2022-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் மும்பை மக்களின் நலனுக்காக அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். அந்த தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெறும்.

மகா விகாஸ் கூட்டணி அமைந்தபோது, இந்த ஆட்சியில் ஏதேனும் நல்லது நடக்கும் என நானும் எதிர்பார்த்தேன். ஆனால் அதிகார போதை அவர்களின் தலையில் ஏறிவிட்டது.

அவர்களின் ஆணவத்தை மக்கள் கையாள வேண்டும். மக்கள் நலனின் அக்கறை கொண்ட நாம் அதிகாரத்திற்கு வர வேண்டும்.

சஞ்சய் ராவத்துக்கு பதிலடி

சிவசேனாவுக்கு இந்துத்வா சான்றிதழ் யாரும் தர தேவையில்லை என சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகிறார். நீங்கள் பேச மட்டும் தான் செய்கிறீர்கள். உங்கள் செயலில் இந்துத்வாவை காண முடியவில்லை. இந்துத்வாவை செயலில் காட்டவேண்டும்.

போலீஸ் சக்தியை பயன்படுத்தி பாரதீய ஜனதாவின் குரலை ஒடுக்கிவிட முடியாது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாலேயே அதை செய்ய முடியவில்லை. உங்களால் செய்ய முடியுமா?

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் கொரோனா வைரஸ், மெட்ரோ பணிமனை பிரச்சினை, மின்சார கட்டண குளறுபடி மற்றும் பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவற்றை மகா விகாஸ் அகாடி அரசு கையாளும் விதத்தை கடுமையாக சாடினார்.

Next Story