திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 24-ந் தேதி முதல் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு


திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 24-ந் தேதி முதல் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2020 11:01 AM GMT (Updated: 22 Nov 2020 11:01 AM GMT)

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 24-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.

திருச்சி, 

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. அதற்கு மாற்றாக திருச்சி பொன்மலை ஜி-கார்னர் ரெயில்வே மைதானத்தில் மொத்த காய்கறிகள் விற்பனை மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டை திறக்கக்கூடாது என கூறியிருந்தார்.

இடைக்கால தடை

இதையடுத்து காந்தி மார்க்கெட்டை திறக்க ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்கி மார்க்கெட்டை திறக்க வேண்டுமென வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே பொன்மலை ரெயில்வே மைதானம் தொடர் மழையின் காரணமாக சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இதுதொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு கோரிக்கை மனுவையும் அளித்தனர். இந்த நிலையில் காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கு வருகிற 26-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்த வழக்கின் தீர்ப்பு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வந்தால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி பால்பண்ணை புதிய வெங்காய மண்டி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார்.

கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

24-ந் தேதி முதல் போராட்டம்

காந்தி மார்க்கெட்டை திறக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் காய்கறி விற்பனை செய்வதில்லை என அனைத்து வியாபாரிகளும் முடிவு செய்துள்ளோம். திருச்சி மாவட்டத்தில் எந்த பகுதிகளிலும் காய்கறிகள் கிடைக்காது. காய்கறிகள் ஏற்றிக்கொண்டு மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்துவோம்.

26-ந் தேதி தீர்ப்பு சாதகமாக வந்தால், 27-ந் தேதி காந்தி மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரம் செய்வோம். ஒருவேளை தீர்ப்பு பாதகமாக வந்தால் 27-ந் தேதி காலை வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பத்துடன் காவல்துறையினர் அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் காந்தி மார்க்கெட் முன்பு உண்ணாவிரதம் இருப்போம்.

தேர்தல் புறக்கணிப்பு

அடுத்த கட்டமாக அரசு வழங்கியுள்ள ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடுவோம். அதன்பிறகு திருச்சியில் இருந்து வியாபாரிகள் சென்னைக்கு புறப்பட்டு சென்று முதல்-அமைச்சர் இல்லத்தை முற்றுகையிடுவோம். இறுதியாக வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

தமிழகம் முழுவதும் 21 லட்சம் பேர் வணிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் சார்ந்து 1 கோடி வாக்கு வங்கி எங்களிடம் உள்ளது. எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story