616 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்


616 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 22 Nov 2020 3:13 PM GMT (Updated: 22 Nov 2020 3:13 PM GMT)

வேலூர் மாவட்டம் முழுவதும் 616 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த 16-ந் தேதி வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 109 ஆண்கள், 6 லட்சத்து 34 ஆயிரத்து 639 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 116 பேர் என மொத்தம் 12 ஆயிரத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 605 வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், வேலூர் மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 616 மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதில் பொதுமக்கள் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா? என சரிபார்த்து பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நேற்று மாவட்டத்தில் உள்ள 616 வாக்குச்சாவடிகளிலும் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. இதற்கான உரிய படிவங்களை பொதுமக்கள் வாங்கி சமர்ப்பித்தனர்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆய்வு செய்தார். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளிலும் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

5,548 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்

நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 5 ஆயிரத்து 548 பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். அதேபோன்று பெயர் நீக்கம் செய்ய 116 பேரும், திருத்தம் செய்ய 578 பேரும், சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 264 என்று மாவட்டம் முழுவதும் நடந்த முகாமில் மொத்தம் 6 ஆயிரத்து 506 பேர் விண்ணப்பங்கள் வழங்கினர் என்று வேலூர் மாவட்ட தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story