கேரளாவுக்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது


கேரளாவுக்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2020 1:57 PM GMT (Updated: 25 Nov 2020 1:57 PM GMT)

உத்தமபாளையம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 4½ டன்ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தமபாளையம், 

உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி ஊத்துக்காடு என்ற இடத்தில் இருந்து மினி லாரி மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன், உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் உமா மற்றும் போலீசார் ஊத்துக்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

கைது

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மினிலாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அனுமந்தன்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து மினிலாரியில் இருந்த 3 டன் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்த முயன்ற ரேஷன் அரிசி மூட்டைகளின் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதேபோல் உத்தமபாளையம் அடுத்த கோம்பையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக உத்தமபாளையம் வட்ட வழங்கல் அதிகாரி ரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாவும் கோம்பைதேரடி வீதியில் மல்லிகா (55) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்தனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story